சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய ஜனாதிபதியே நாட்டுக்குத் தேவை என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் நடைபெற்ற நத்தார் தின நள்ளிரவு திருப்பலியைத் தொடர்ந்து கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது.
இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே இன்று ஜனாதிபதிக்கான தேர்தலை நாம் சந்தித்திருக்கின்றோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு தலைமைத்துவம் இன்று தேவைப்படுகின்றது. இதற்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும். சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய ஜனாதிபதியே நாட்டுக்குத் தேவை என அவர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.