சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி ஆகிய திரைப்படங்களை தடை செய்யக் கோரும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இத்திரைப்படங்களை தடை செய்யக் கோரி அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது புலிப் பார்வை திரைப்படம்;
இலங்கையில் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சேவின் உறவினர்களை அங்கமாகக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது கத்தி திரைப்படம். இந்த திரைப்படங்களை தடை செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சென்னையில் சனிக்கிழமையன்று புலிப்பார்வை திரை இசை வெளியீட்டு விழாவில் சில கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்களை நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியினர் இரும்பு தடிகள் கொண்டு தாக்கி மண்டைகளை உடைத்தனர். இத்தாக்குதலை பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கண்டித்துள்ளன .இந்த நிலையில் புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களை தடை செய்யக் கோரி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் நாளை சென்னையில் ஒன்று கூடுகின்றனர். இந்த தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் செயல்படுகிறார்.
