August 14, 2014

காங்கேசன்துறை சீமெந்து ஆலை இரும்புகள் தென்னிலங்கைக்கு!

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக் கட்டடம் உடைக்கப்பட்டு பெருமளவு இரும்பு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.   

படையினரின் ஒத்துழைப்புடனேயே இரும்புகள் கொண்டு செல்லப்படுவதாகவும் இந்த விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வலி.வடக்கு பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேறிய நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2009  ஆம் ஆண்டு போர் நிறைவடைந்து வலி.வடக்குப் பகுதியில் பெரும்பாலான பகுதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் சீமெந்து தொழிற்சாலை உள்ளிட்ட ஒரு பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடக்கம் அந்த ஆண்டின் ஆரம்பம் வரை மேற்படி உயர் பாதுகாப்பு வலயம் என குறிக்கப்படும் பகுதிக்குள்ளிருந்த மக்களுடைய வீடுகள், பாடசாலைகள் ஆகியன இடித்தழிக்கப்பட்டன.

கடந்த சில தினங்களாக சீமெந்து தொழிற்சாலை கட்டடம் இடிக்கப்பட்டு அங்கிருந்து பெருமளவு இரும்புகள் தினசரி பாரவூர்திகளில் கொண்டுசெல்லப்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் இந்த இரும்புகள் தென்னிலங்கைக்கே கொண்டு செல்லப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

தினமும் நள்ளிரவு வேளைகளில் பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து பாரவூர்திகள் இரும்புகளை ஏற்றிச் செல்வதாகவும் பிரதான வீதியில் பொலிஸ் நிலையம் உள்ளபோதும் எவ்வாறு இவை கொண்டுசெல்லப்படுகின்றன.

இதேவேளை படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே இது நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.