அமெரிக்காவுடன் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனினும் அது சாத்தியப்படாத நிலையே காணப்படுவதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசனுக்கு எதிராக இலங்கை அரசாங்க தலைமைத்துவத்தின் அனுசரணையுடன் தனிப்பட்ட குரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வாசிங்டன் தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அமெரிக்காவுடன் கடும் எதிர்ப்பாக நடந்து கொள்ளும் நாடுகளில் கூட இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று வாசிங்டன் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தநிலையில் அதிக செலவில் அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன கடந்த வாரத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் வம்சாவளியான அமெரிக்க பிரஜையான இமாட் ஸிப்ரியை கொண்டு இராஜதந்திர உறவை கட்டியெழுப்பவும் இலங்கை முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமாட் ஸிப்ரி என்பவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் சிறந்த நட்பை கொண்டவர் என்ற அடிப்படையிலேயே, அவரின் உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
ஒபாமாவுக்கான தொழில்நுட்ப அமைப்பின் இணைத்தலைவராக ஸிப்ரி செயற்படுகிறார். அத்துடன் தேசிய நிதிக்குழுவிலும் ஸிப்ரி பிரதித்தலைவராக செயற்படுகிறார்.
இந்தநிலையில் பாகிஸ்தானின் முதலீட்டு சபையில் முன்னர் தலைவராக இருந்த சலீம் எச் மன்ட்விவாலா என்பவரே ஸிப்ரியை இலங்கையின் அரசாங்க கட்சி தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து ஸிப்ரியும் மற்றும் ஒரு அமெரிக்க வர்த்தகரும் இலங்கைக்கு அடிக்கடி சென்று திரும்பியதாகவும் சுற்றுலாத்துறையில் சுமார் 200 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கு குறித்த வர்த்தகர் ஆராய்வுகளை மேற்கொண்டதாகவும் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் முதலீடுகளின் போது ஏற்படும் ஆரம்பச் செலவுகள் எதனையும் தாம் இலவசமாக மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அமெரிக்க வர்த்தகர் கூறியிருப்பதாக செய்தித்தாள் கூறியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தற்போது அதிக செலவில் அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவை புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
.jpg)