இலங்கைக்கு கடும் சவாலாக மாறியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது இரண்டாவது தவணைக் காலத்துக்குரிய மேற்சபை உறுப்பினர்களாக 15 வள அறிஞர்களை, உலகத்தின் பல பாகங்களிலும் இருந்து நியமனம் செய்துள்ளது.
தென்னாபிரிக்கா, தென்சூடான், மலேசியா, இந்தியா, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து, பன்முகத்திறனும், அனுபவமும் மனித உரிமை பாதுகாவலர்களுமாகிய இவ் வள பெருமக்கள், மேற்சபை உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
இப்பிரமுகர்களின் பெயர் விபரம்:
1. கலாநிதி ராம் சே கிளார்க் (அமெரிக்காவின் முன்னைநாள் சட்டத்துறை நாயகம்)
2. திரு.ரொபேர்ட் இவான்ஸ் (ஐரோப்பிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னைநாள் உறுப்பினர்- பிரித்தானியா)
3. திரு. டானியல் மாயன் (தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கம்)
4. வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் (அமெரிக்கத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்பவற்றின் முன்னை நாள் தலைவர்)
5. திரு. கையில்ஸ் பிக்ஸ் (சட்ட வல்லுநர், பிரான்ஸ்)
6. திருமதி உஷா சிறிஸ்கந்தராஜா (எழுத்தாளர், தமிழ் உணர்வாளர்-கனடா)
7. திரு. இராசரத்தினம் சுப்பிரமணியம் (கல்வியியலாளர்-கனடா)
8. திரு. மனோகரன் (முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் - மலேசியா)
9. திரு. சதீஸ் முனியாண்டி (செயலாளர்-உலகத் தமிழர் பேரவை -மலேசியா)
10. பேராசிரியர் சரஸ்வதி இராசேந்திரன்( மனித உரிமைகள் ஆர்வலர், தமிழ் நாடு - இந்தியா)
11. பேராசிரியர் டேவிட் மதாஸ் (மனித உரிமைகளுக்கான சட்டத்தரணி, கனடா)
12. திரு. றோய் செட்டி (தென்னாபிரிக்கா)
13. திரு. சத்திய சிவராமன் (சுதந்திர ஊடகவியலாளர், நியூ டெல்லி - இந்தியா)
14. வைத்திய கலாநிதி பிரையன் செனவிரட்னா (மருத்துவர் -அவுத்திரேலியா)
15. திரு. தானி சேரன் (முதற்தலைவர் உலகத் தமிழர் அமைப்பு - வட அமெரிக்க தமிழ் சங்க முன்னாள் தலைவர் - அமெரிக்கா)
சமகாலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் முக்கிய பணிகளானது இப்பெருமக்களின் வருகையின் வழியே நன்கு உயர்வடையும் என்பது திண்ணம் எனத் தெரிவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், பன்முகத் தளங்களில் இப்பெரியார்கள் பெற்றுள்ள ஆழமான, நீண்ட அனுபவமும் ஆற்றலும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வேட்கைபால் இவர்கள் கொண்டுள்ள பற்றுறுதியும் நா.தமிழீழ அரசாங்கம் வலுப்பெறுவதற்கு உறுதுணையாக அமையும் என்பதிலும் எமக்குத் திடமான நம்பிக்கையுண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை பரிந்துரைக்கமைய, அதன் யாப்பு விதி 1.8.2 இற்கு ஏற்ப இப்பிரமுகர்கள் மேற்சபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
