July 04, 2014

பிரித்தானிய பிரஜையின் கொலை தொடர்பான தீர்ப்பு இரு வாரங்களில் வழங்கப்படும்- மேல் நீதிமன்றம்

பிரித்தானியா பிரஜையான தொண்டு நிறுவன பணியாளர் குராம் ஷேக் கொலை செய்யப்பட்ட வழங்கு தொடர்பான தீர்ப்பை இன்னும் இரண்டு வாரங்களில் வழங்க முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உறுதியளித்துள்ளது.

வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து தரப்பினரும் தமது இறுதி வாதங்களை எதிர்வரும் 11 ஆம் திகதி முன்வைக்க அறிவிப்பை வெளியிட்ட போதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி வல்கம இதனை அறிவித்துள்ளார்.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திரபுஷ்ப வித்தானப்பத்திரண உட்பட ஏனைய 5 சந்தேக நபர்கள் இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் பிரகீத் சத்துரங்க வழக்கில் ஆஜராகியிருந்தார்.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி குராம் ஷேக் கொலை செய்யப்பட்டதுடன் அவரது காதலியான விக்டோரிய கூட்டாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தங்காலை நேச்சர் சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது. சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.