இலங்கை கிரிக்கெட் அணியின் உலக புகழ்பெற்ற நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முரளீ போன்ற பிரபல விளையாட்டு வீரர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் அது தவறில்லை எனவும் ஆளும் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார தஸநாயக்க கூறியுள்ளார்.
அப்படியான சந்தர்ப்பத்தில் விளையாட்டு ரசிகர்கள் உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
முத்தையா முரளீதரன் மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அவர் மேல் மாகாண தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில், தற்போது அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முரளீதரன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் முரளீதரன் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டு அந்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
