April 11, 2014

புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! இராணுவம் மரணம் கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை

நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து சந்தேகநபர்களான கோபி உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்த தப்பி வேறு இடத்துக்குச் சென்றதாகவும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ள இராணுவத்தினர் அவர்கள் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து கோபி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் கோபி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அப்பகுதியில் இராணுவத்தினருக்கும் கோபி குழுவினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை பதவியா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிரிழந்த மூவரின் சடலங்கள் தொடர்பில் இரர்ணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவ்வாறு உயிரிழந்தவர்களில் கோபியும் அடங்குகின்றாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான திருமதி. ராசமலர் என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.