April 08, 2014

புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய நந்தகோபனிடம் தொடர்ந்து விசாரணை

மலேஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட கபிலன் என்று அழைக்கப்படும் நந்தகோபனிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவரும், உறுப்பினருமான நந்தகோபன், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு முயற்சித்த போது, மலேஷியாவில் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தற்போது, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலின் கீழ், சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் நந்தகோபன் பல நாடுகளில் வாழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், யுத்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் தங்கியிருந்த காலப் பகுதியில் இலங்கையில் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.