இலங்கை அரசின் போர் குற்றங்களை வெளிப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிகள் உண்மையானவை என போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசை பிரதிநிதித்துவம் செய்த முக்கிய ராஜதந்திரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி கடந்த காலங்களில் ஒளிப்பரப்பிய போரின் இறுதிக்கட்டத்தில் அரச படையினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமை பயங்கரமான குற்றச் செயல் என தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விசாரணை நடத்தி அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தாது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றிய தயான் ஜயதிலக்க இந்திய ஊடகம் ஒன்றிடம் நேற்று முன்தினம் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்வது இலங்கை இராணுவத்தின் கொள்கை அல்ல. இந்த கொலைகள் சில இராணுவத்தினர் அல்லது சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
இப்படியான செயல்கள் போர் குற்றங்கள் என்று கருதப்படும் என்ற காரணத்தினால், கைது செய்யப்பட்ட எதிரிகளை கொலை செய்யும் கொள்கைகளை உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்த இராணுவமும் கொண்டிருப்பதில்லை.
இவ்வாறான குற்றச் செயலுக்கு கட்டளையிட்ட மற்றும் அதனை செயற்படுத்திய படையினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனனயை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும்.
உண்மை என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும். பங்களாதேஷ், கம்போடியா, கௌதமாலா, அர்ஜன்டீனா போன்ற நாடுகளில் நடைபெற்றது போன்று பல வருடங்களின் பின்னராவது நியாயம் கிடைக்கக் கூடும் என்றார்.

No comments:
Post a Comment