கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் பௌத்த கொடி மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தத் தகவலை, ஐ.நா மனிதஉரிமை ஆணையர் பணியகத்தின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் வெளியிட்டுள்ளார். கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் சிலையை அகற்ற வேண்டும் என்று, நவநீதம்பிள்ளை ஆலோசனை கூறியதாக, சிறிலங்கா அரசதரப்பு தகவல்களை கசிய விட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையர் பணியகத்தின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில்,
கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் சிலை பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அது அகற்றப்பட வேண்டும் என்று ஒரு போதும் அவர் கூறவுமில்லை. சுதந்திர சதுக்கத்தில் புத்தமதக்கொடி மட்டும் பறக்கவிடப்பட்டிருக்கும் விவகாரத்தை நவநீதம்பிள்ளை விவாதித்தார்.
சிறிலங்கா கொலனிய நாடாக இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், ஒரு மதத்தின் கொடி மட்டும் பறக்கவிடப்படுவது பொருத்தமானதா என்று நவநீதம்பிள்ளை கேட்டார். ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர் இதனை மற்றவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு செயலாகப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
பௌத்த கொடிக்குப் பதிலாக, சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்காவின் தேசியக்கொடியை பறக்கவிடுவதைப் பற்றி பரிசீலிக்கலாம் என்று சிறிலங்கா அரசுக்கு அவர் ஆலோசனை தெரிவித்தார். தேசியக்கொடி, அனைவருக்கும் சொந்தமானது, அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு கொடி, என்றும் நவநீதம்பிள்ளை ஆலோசனை வழங்கினார்” என்றும் தெரிவித்துள்ளார்.
.jpg)
No comments:
Post a Comment