August 07, 2013

கொழும்பில் எதிரொலித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பு!

கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கெடுக்க ஆர்வங்கொண்டுள்ள உலகத்தலைவர்களின் சிறிலங்காவுக்கான வருகையினை தடுத்து நிறுத்தும் வகையிலான தீவிர பரப்புரைகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அரங்கில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா வெளிவிகார அமைச்சகத்தின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் ட வாஸ் குணவெர்தன தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங் கொண்டுவருவதற்கான அழுத்தத்தினை பிரயோகிக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் இக்கருத்து கொழும்பில் வெளிவந்துள்ளது.

அனைத்துலக அரங்கில் விடுதலைப்புலிகளினது முன்னிலை வகிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்குமாறு பிரித்தானியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிகார அமைச்சுப் பிரதிநிதி சஜின் ட வாஸ் குணவெர்தன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டி அந்தந்த தொகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment