குடிநீர் கேட்ட எமது மக்களுக்காக நான் தலைமை தாங்கி போராட்டங்களை முன்னெடுத்தேன். அதனாலேயே இன்று எனது உயிருக்கு ஆபத்துள்ளது. பல தரப்புக்கள் ஊடாக அதனை எச்சரித்து வருகின்றனர் என்று வெலிவேரிய ரத்துபஸ்வல விகாரையின் விகாராதிபதி பண்டித சிறிதம்ம தேரர் தெரிவித்தார்.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
குடிநீர் கேட்ட மக்களை மிகவும் மோசமான முறையில் தாக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
ஆனால், நீதிக்காகத் தொடர்ந்தும் போராடுவோம். இன்று எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
சுத்தமான குடிநீரை பெற்றுத்தருமாறு கூறி அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தோம். ஆனால், இன்று அமைதியாக கோரிக்கைகளை முன்வைத்து போராடிய பொது மக்களை மிகவும் மோசமாகத் தாக்கியுள்ளது.
அதேபோன்று, அரசபடைகளால் எனது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், இதுவரையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக, அத் தொழிற்சாலைக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மரணித்த வெலிவேரிய மக்களின் உயிர்களின் ஆத்ம சாந்திக்காக நாம் தொடர்ந்தும் எமது உரிமைகளுக்காகப் போராடுவோம்.
தற்போது தாங்கிகளில் நீர் வழங்கப்படுகின்றது. ஆனால், அது போதுமானதல்ல.
எமது மக்களுக்காக நான் தலைமைதாங்கி போராட்டங்களை முன்னெடுத்தேன். அதனாலேயே இன்று எனது உயிருக்கு ஆபத்துள்ளது.
பல தரப்புக்கள் ஊடாக அதனை எச்சரித்து வருகின்றனர். ஆனால், நான் மரணத்துக்குப் பயந்தவன் அல்ல என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment