July 17, 2013

யாழ் புத்தகத் திருவிழா அழைப்பை நிராகரிக்கவேண்டும் - சீமான்

யாழ் புத்தகத் திருவிழா அழைப்பை நிராகரிக்கவேண்டுமென்று நாம்
தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து சீமான்
வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும்
தமிழர்கள் கேட்டுக்கொண்டதாகவும், அதுகுறித்து தங்களது உறுப்பினர்களின்
கருத்தறிய வரும் 27ஆம் திகதி சென்னை தியாகராயர் நகரில் ஒரு கூட்டத்தையும்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி)
ஏற்பாடு செய்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. யாழ்ப்பாணத்தில் இந்த புத்தக விழாவை நடத்த தேவையான அனைத்து ஒத்துழைப்பையும்
தருவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகம், யாழ்ப்பாணம் மாநகராட்சி ஆகியன
மட்டுமின்றி, யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் இந்திய துணைத் தூதரகமும்
முன்வந்திருப்பதாக, தனது உறுப்புனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புத்தக விழாவை செப்டம்பர் மாத இறுதியில்
நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழினத்தை திட்டமிட்டு ஏமாற்றும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசின்
மோசடியாகும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குப்
பகுதியில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் அமைதியாகவும்,
மகிழ்வுடனும் வாழ்கின்றார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இப்படிப்பட்ட
ஒரு ஏற்பாட்டில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. இதன் பின்னணியில்
தமிழினத்தைக் காட்டிக்கொடுத்துவரும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள
பொதுநலவாய (காமன்வெல்த்) மாநாட்டில் கலந்துகொள்ள வரும் அயல்
நாட்டு தலைவர்களுக்கு படம் போட்டுக்காட்ட இப்படிப்பட்ட
ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது இலங்கை அரசு. இதற்கு யாழ்ப்பாணத்தில்
இயங்கிவரும் இந்தியத் தூதரகம் உதவ முன்வந்துள்ளது என்கிற ஒரு செய்தியே,
அங்கு தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறையை மறைப்பதற்கான திட்டம் என்பதற்கான ஆதாரமாகும்.

No comments:

Post a Comment