கோத்தபாயாவின் அணியும், பசில் ராஜபக்ச அணியும், நாமல் ராஜபக்ச அணியும் நாட்டின் சட்டத்தை நிர்வகித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, மகிந்த ராஜபக்ச வெறுமனே அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வட மேல் மாகா ண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், மஹாவெவ நகரில் கட்சியின் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போது இவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு இன்று 13வது திருத்தத்தை உடுத்தி கொண்டு, அதனை முன்வைத்து நாட்டின் பிரச்சினைகளை மறந்து வருகிறது.
எனினும் மகிந்த ராஜபக்ச அரசு வீழ்ச்சியடையும் எதிரொலியே அரசுக்குள் கேட்கிறது. 13வது திருத்தச் சட்டம் வேண்டாம் என்று கோத்தபாய கூறுகிறார்.
சம்பிக்க, விமல் போன்றவர்கள் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு கோருகின்றனர். ஆனால் மகிந்த இந்தியாவுக்கு வேறு ஒன்றை கூறி வருகிறார்.
நாட்டில் இன்று சில பிக்குமார் இறைச்சி கடைகளை மூடியும், அவற்றை தீயிட்டும் வருகின்றனர். இன, மத வாத பிரச்சினைகளுக்கு அடித்தளம் போட்டாகிவிட்டது.
எனினும் இவற்றை எதிர்ப்பவர்களும் அரசில் உள்ளனர். அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை வெளியில் வந்து விமர்சிக்கும் புதுமையான அமைச்சர்கள் இருக்கும் அரசு இது.
கமத்தொழிலாளர்களையும் மீனவர்களையும் கஷ்டத்தில் தள்ளி விட்டு நுரைச்சோலை அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. இதுவரை 20 தடவைகள் அந்த மின் நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன.
கப்பல் செல்லாத துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. விமானம் இறங்க முடியாத விமான நிலையம் அமைக்கப்பட்டது. பறவைகள் விமானங்களின் சிறகுகளை சேதப்படுத்தி வருகின்றன.
வீதிகள் செப்பனிடப்படுகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கும் தரகுப் பணத்தை பற்றி எவரும் பேசுவதில்லை என தெரிவித்தார்.

No comments:
Post a Comment