20க்கு மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள்
தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர்
நாடு திரும்பியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தான் வெளியிட்டுள்ள
புதிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கடந்த வருட ஜூன் மாதத்திற்கும் இந்த வருடம் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்
நாடு திரும்பியுள்ள மூவர் உள்ளிட்ட 26 ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். மேற்படி அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகை துறைப்பணி சார்ந்த படுகொலைச் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் உலகிலேயே கொலைக்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுதல்
குறித்த படுமோசமான பதிவுகளில் ஒன்றாக கடந்த தசாப்தத்திற்கு மேலாக
விசாரணைக்கு எடுக்கப்படாத ஒன்பது ஊடகவியலாளர்களின் கொலைகள் விளங்குகின்றன. கடந்த
வருடம் அரசாங்கம் தகவல்கள் வெளியிடும் சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில்
நடவடிக்கையை எடுத்திருந்ததை நினைவுபடுத்தியுள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சு கடந்த வருடம் யூலையில் தகவல் சுதந்திரம் குறித்த சட்ட மூலமொன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கென மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகளை அரச ஆவணங்களைப் பார்வையிடுதற்கு நாட்டு மக்களுக்கு அனுமதியளிக்கப்படின்
அது தேசியப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக
அமைந்து விடுமெனக்கூறி தடை போட்டிருந்ததெனவும் அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் எதிரணியின் புதிய இணையத்தளங்கள் இரண்டைச்சோதனையிட்ட
பொலிஸார் அங்கிருந்த ஒன்பது பணியாளர்களைக் கைது செய்ததுடன் கணினிகள் சிலவற்றையும்
பறிமுதல் செய்திருந்தனர். கடந்த வருடம் மார்ச்சில் இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்ததகவல்களை தாங்கி வரும் எந்தவொரு செய்தியோ அல்லது குறுந்தகவல் எச்சரிக்கையோ வழங்குவதற்கு முன்னர் அனைத்து செய்தி நிறுவனங்களும் உத்தியோகபூர்வ
அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென துறை சார் அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment