May 01, 2013

சிங்களவர்கள் குடியேறும் வவுனியா

தமிழ் மக்களது 400 ஏக்கர் காணியில் சிங்கள குடியேறுற்றத்தினை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுரம் கிராம வீட்டுத்திட்டத்திலேயே காணி அபகரிப்பு நடைபெறுகிறது. 1995ஆம் ஆண்டு வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 400 தமிழ்குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார தேவைக்கென ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு ஏக்கர் வீதம் 400 ஏக்கர் காணிகள் அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க தலைமையில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் அவர்களின் தேவைகள்பற்றியும் அறியும் முகமான கலந்துரையாடல் நடைபெற்றது இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; தமிழ் மக்களது காணியில் உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மிக வேகமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் காணி அமைச்சு செயல்படுவதோடு இன நல்லிணக்கம் தொடர்பாக மாவட்டங்கள்தோறும் அரச பிரச்சாரத்திலீடுபட்டுவரும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க முழுமூச்சாகவுள்ளார். காணி அனுமதிப்பத்திரங்களுடைய தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களை குடியேற்றும் அரசின் இத்தகைய அடாவடித்தனங்களை உடன் நிறுத்த முன்வருமாறு சர்வதேச சமூகம் உட்பட அனைத்துத்ரப்பினரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம். செட்டிகுளம் பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் அனைவர் முன்னிலையில் மேற்படி 400 ஏக்கர் காணிகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் அவற்றை உலுக்குளம் சிங்கள மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ரஜீவவிஜயசிங்கதெரிவித்துள்ளார். எனினும் சமூகமளித்த காணிச்சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது காணிகளைச் சிங்கள மக்கள் அபகரித்து வருவதாக முறையிட்டும் உரிய காணி அனுமதிப்பத்திங்களைக் காண்பித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும் இந்தக் காணிகள் தம்மிடம் முறையான அனுமதி பெறப்படாமல் காணி அனுமதிப்பத்திரத்துடன் முன்னர் வழங்கப்பட்டது தவறு என்று மேலதிக காணி அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டதாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகள் யாவும் அப்போதைய வட-கிழக்கு மாகாண அரசின் காணி அமைச்சின் அனுமதியுடன் செட்டிகுள பிரதேச செயலளரால் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ்வரும் காணி அபிவிருத்திச் சட்டம் காணி அளிப்பு விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் அரச காணியின் ஆட்சியை மீளப்பெறும் சட்டம் ஆகியன மாகாண அரச காணியை வழங்க மாகாண அரசுக்கு அதிகாரமளித்திருந்தன. எது எவ்வாறு இருப்பினும் அரசினால் காணி அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட காணிகளை மீளப்பறிக்கும் ஏற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையே. அதிலும் ஓர் இனத்திடமிருந்து அவர்களது சொந்தக்காணிகளைப் பறித்தெடுத்து அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனால் எவ்வாறு இனநல்லிணக்கத்தை மேம்படுத்தவும் முடியும் என அரசு நினைக்கின்றது. என அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment