March 19, 2013

விலகிய திமுக.. விதிர்த்துப் போன காங்கிரஸ் அவசர ஆலோசனை

இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் சொல் பேச்சைக் கேட்காததால், ஆதரவு வாபஸ் என்ற அஸ்திரத்தைப் பாய்ச்சியுள்ள திமுகவின் திடீர் முடிவால், குழப்பமடைந்துள்ள காங்கிரஸ் அவசர ஆலோசனை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

இலங்கை விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனை செய்யவில்லை. இனியும் மத்திய அரசில் நீடிப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாக அமையும். எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து விட்டார்.

இதையடுத்து அவசரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டி கட்சி எம்.பிக்களுடன் ஆலோசித்துள்ளது.

முன்னதாக, இலங்கை விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்களுடன் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கருணாநிதியை சென்னை வந்து சந்தித்த ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இடம் பெற்றனர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பிக்களை அழைத்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். புதிய சூழல் குறித்து அப்போது அவர் கட்சி எம்.பிக்களுடன் விவாதித்ததாக தெரிகிறது.

திமுக முடிவு குறித்து இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று சோனியா தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment