சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பா.ஜ. உள்பட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வரும் 15ம்தேதி திமுக தலைவர் கலைஞர் சங்கரன்கோவிலில் வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு வாக்குகள் சேகரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11ம்தேதி முதல் 16ம்தேதி வரை 6 நாட்கள் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர் முத்துகுமாருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த தொகுதி என்பதால் அவரே நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக வேட்பாளர் முத்துசெல்விக்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 14ம்தேதி சங்கரன்கோவில் வருவதாக அறிவிக்கப்பட்டது. முதல்வரை வரவேற்க அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தடபுடல் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், வரும் 14ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கண்டிப்பாக பெங்களூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் ஜெயலலிதா சங்கரன்கோவில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் கோர்ட் உத்தரவால் அவர், பிரச்சாரத்திற்கு வருவாரா அல்லது அவரது வருகை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப் படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் அதிமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
பிரச்சாரம் 16ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. 15ம் தேதி திமுக தலைவர் கலைஞர் சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். இதனால் 16ம் தேதி ஜெயலலிதா, பிரச்சாரம் செய்யலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:
Post a Comment