மதுரை: நடிகர் வடிவேலு மீது தேர்தல் விதியை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் வடிவேலு பிரசாரம்
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் வடிவேலு, தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஜயனை (இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க செயலாளராக உள்ளார்) ஆதரித்தும் நத்தம் பகுதியில் 6.4.2011 அன்று பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறையை மீறி அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி நத்தம் போலீசார், நடிகர் வடிவேலு, விஜயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ரத்து செய்யக் கோரி மனு
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு, விஜயன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கூறுகையில், "நடிகர் வடிவேலு, விஜயன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடை/tறு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில், சட்டவிரோதமாக கூடியது தொடர்பாகவோ, பொதுமக்களுக்கு இடை/tறு விளைவித்தது தொடர்பாகவோ எதுவும் கூறப்படவில்லை. தேர்தல் விதியை மீறியதாகவே புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே மனுதாரர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 290 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்," என்றனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் வடிவேலு, தி.மு.க பிரமுகர் விஜயன் ஆகியோர் மீதான வழக்கை நத்தம் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற விசாரணையின்போது அவர்கள், கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment