January 28, 2012

தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி தெரியவில்லை... குஷ்பு விசனம்!

ஈரோடு: இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்.

நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன்.

தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது.

இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது.

இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான்.இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான் என்றார் அவர்.

No comments:

Post a Comment