ஒற்றையாட்சிக்குள் நாட்டுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாத வகையில் தற்போதைய அதிகாரங்களைவிட மேலதிக அதிகாரங்களை
மாகாண சபைகளுக்கு வழங்குவது தொடர் பில் ஐந்து முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக நேற்று சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் முறைமை மாற்றம் புதிய அரசியலமைப்புக்குள்ளேயே கொண்டுவரப்படும் என்றும் பிரதமர் கூறி னார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு பேரவையை உருவாக்கும் தீர்மானம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே
பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தவும் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் அடிப்படை வாதத்தினை ஒழிப்பதற்கே மக்கள் அரசுக்கு ஆதரவு வழங்கினர். 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன்போதெல்லாம் மக்கள் கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை. கடந்த காலத்தில் 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனை மக்கள் நிராகரித்தார்கள்.
கடந்த காலங்களைவிட இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் சபைக்குள் விவாதிக்கும் நிலை முதன்முதலாக ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களின் கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
புதிய அரசியலமைப்பினால் நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளும் தீரப்போவதில்லை. ஆனால் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான அடித்தளம் இதன்மூலம் இடப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசு புதிய மூலோபாயங்களுடன் இதனை முன்னெடுக்கின்றது. இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவும் கிடைத்துள்ளது.
19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து பாராளுமன்ற அதிகாரங்களை பலப்படுத்தினோம். இன்று மக்களின் கருத்துக்களுக்கமைய புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். தெரிவுக்குழுக்கள் தொடர்பாக புதிய சம்பிரதாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய நியமித்த குழு ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை சமர்ப்ப்பிக்கும். தேர்தல் முறை மாற்றம் புதிய அரசியலமைப்புக்குள்ளேயே உள்ளடக்கப்படும்.
இது தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகள் மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்படும். யோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படும்.
சிறுபான்மையின கட்சிகள், சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்தும் முன்னெடுக்கப்படும், மத்திய அரசாங்கம், மாகாண சபைகள், பிரதேச சபைகள் அனைத்தும் கிராமங்களில் தமது அரசியல் அதிகாரத்தையும், அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முயற்சிக்கின்றன. இதனால் வீண் விரயங்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்போம்.
ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் 5 முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த முடியாமல் போனால் ஒருபோதும் நடைபெறமாட்டாது என்றார்.
No comments
Post a Comment