Latest News

November 26, 2015

உலகமும் ரசிக்கிறது காண்
by admin - 0

உலகமும் ரசிக்கிறது காண்

வீரம்
சுதந்திரம்
மண்வாசம்
விலைபோகா தலைவன்
செஞ்சமர் போராளி என
செழுமையான
தமிழீழத்தை
கருக்கொண்ட துரோகம்
கருவறுத்து சென்றது காண்

எதிரியும்
துரோகியும்
கைகுலுக்கி
நடத்திட்ட
அதர்ம யுத்தத்தில்
தர்மம் புதைக்கப்பட்டு
உரிமை மறுக்கப்பட்டு
ஊமையான ஈழத்தில்
கந்தக துகள் கவிவது காண்

குண்டு மழை
பொழிந்து
பூரிப்படைந்தது
யுத்த மேகம்
சகதியில்
புதைந்து
சரிந்தது
எம்மவர் தேகம்
வீரென வந்த ரவை
தோலுரித்து
தசை கிழித்து
நரம்பறுத்து
எலும்புடைத்து
குருதி குடித்து
உயிர் எடுத்து
சகதியில் நுழைந்து
செந்நிறமாய் கலந்தது காண்

மிஞ்சிட்ட உடல்
தஞ்சமென உயிர்
ஆறுதலுக்கு யாருமில்ல
அம்மா என்றும்
அப்பா என்றும்
மகளே என்றும்
மகனே என்றும்
துடி துடித்து
வெள்ளி பறவையின்
மிரட்டலுக்கும்
கொத்து குண்டின்
கொலைப் பசிக்கும்
இரையாகி போனதை காண்

உறவுகள்
உடற்குவியல்
ஈருயிராய் தமிழச்சி
வலியால் வாடி
மயக்கமுற்று
விழித்து
துணைவனை தேடுகிறாள்
அவயங்களில்லை
வார்த்தைகளில்லை
கண்ணீரால் பேசுகிறான்
தாகம்
உமிழ் நீரும்
உறுதுணை இல்லை
மூச்சையாகி
மழலை குரல் கேட்டு
மகவை அணைத்து
தொப்புள் கொடி
கடித்து
பிஞ்சை காக்க
பகையே
தஞ்சமென
நடக்க
மறைந்திருந்த சிங்களத்திற்கு
பாசம் மரணித்து
சிசுவை பறித்து
பசுவை தனித்து
தர்ம சக்கரத்தில்
கட்டி
சிங்களம் வேட்டையாட
கூகுளும் பார்த்தது
கழுகும் பார்த்தது
பதறிய தாய்க்கும்
கதறிய சேய்க்கும்
உதவிட சாமியில்ல
தமிழினம்
மீட்சியற்று மடிவதை
உலகமும் ரசிக்கிறது காண்

ஞா. ரேனுகாசன்
« PREV
NEXT »

No comments