Latest News

September 15, 2015

எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்-டக்ளஸ்
by Unknown - 0

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த எமது மக்களுக்கு நியாயமான முறையில் விசாரணை நடாத்தப்பட்டு, தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் உறுதியோடு குரல் கொடுத்து வருகின்றோம்.

இதேவேளை, சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை நடத்தி மக்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். 

எச்சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி தடைப்பட்டு விடக்கூடாது, தடைப்படவும் விடமாட்டோம் எனவும் தெரிவித்தார். 

அழிவுகளையும், இழப்புகளையும் சந்தித்த எமது மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு உரிய பரிகாரம் தேடப்படல் வேண்டும்.

நீண்ட கொடிய யுத்தத்தால் ஏற்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

எமது மக்களின் இழப்பீடுகளுக்கும் பரிகாரம் தேடப்பட வேண்டும். அதற்காகவே, நீதி விசாரணையை நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

நாம் வலியுறுத்தும் நீதி விசாரணைக்கான கோரிக்கையின் ஊடாக எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்குத் தேவையான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதுமட்டுமன்றி, நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நீடித்து நிலைக்கக் கூடியதுமான தீர்வினையும் காண முடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments