விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராணுவத்தினரை விட அவர்களுக்கு கட்டளையிட்டவர்களை கண்டறிவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஞாயிறு இரிதா வாரஇதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துவெளியிட்டுள்ள மங்கள சமரவீர,
இலங்கையில் ஹைபிரிட் நீதிமன்ற கட்டமைப்பு போன்ற நீதிமன்றங்கள் இதற்கு முன்னரும் செயற்பட்டுள்ளன. 1970 களில் கதிர்காம அழகி பிரேமவதி மனம்பேரியின் மரணம் தொடர்பான விசேட நீதிமன்றம் அதற்கான எடுத்துக்காட்டாகும்.
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை புறக்கணித்து, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கி வைத்திருக்க முடியாது.
போர்க்குற்றங்கள் தொடர்பான ஹைபிரிட் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்துக்கே உள்ளது. எனினும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை மட்டுமே அதற்கு நியமிக்க வேண்டும்.
இதன்போது சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நீதிமன்றத்தின் நோக்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிப்பாய்களைக் கண்டறிந்து தண்டனை அளிப்பதல்ல. அவர்களுக்கு கட்டளையிட்டவர்களைக் கண்டறிவதே ஹைபிரிட் நீதிமன்றத்தின் நோக்கம்.
அவ்வாறானவர்களைத் தண்டிப்பதன் ஊடாக மட்டுமே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment