இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது மிகச் சாதாரணமாக நடைபெறும். அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இடம்பெறாது என மனித உரிமைகள் ஆர்வலரான அருட்தந்தை யோகேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அங்கு குறிப்பிட்டவை வருமாறு,
இங்கு நான் உரிமை மீறல்கள் பற்றி சில வார்த்தைகளை பேசியாக வேண்டும். இலங்கையில் உரிமை மீறல்கள் என்பது 80களிலேயே தொடங்கிவிட்டது. இது இரண்டாயிரம் ஆண்டுகளிலும் தொடர்ந்தது. இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது என்பது சாதாரணமாக நடைபெறும்.
ஆனால் இது தொடர்பாக எந்த முறையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது. தமிழர்கள் காணாமல் போனது பற்றி கேள்வி எழுப்பினால் உடனடியாக இலங்கை அரசாங்கம் அதை பற்றி விசாரிக்க குழு ஒன்றை அமைக்கும்.
ஆனால் அந்த குழுவினால் ஒரு பயனும் இருக்காது. தற்போதைய விசாரணை குழுவின் அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள சிபாரிசுகளை நாங்கள் வரவேற்கிறோம்
ஆனால் அதில் தேவையில்லாத பொறிமுறைகள் சேர்க்கப்பட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அக்குழுவின் அறிக்கையில் போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய சந்தேகங்களை இலங்கை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் உண்மையாக நீதி கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். மேலும் இலங்கைப் போரின் போது கைது செய்யப்பட்டவர்கள், எத்தனை பேர், அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த தமிழர்களின் கோரிக்கைகள் குறித்தும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது என்பது பலவகைப்படும். கடைக்கு செல்லும் ஒருவர் வீடு திரும்ப மாட்டார். அவரை யார் அழைத்து சென்றனர், எங்கு அழைத்து சென்றனர் என்று யாருக்கும் தெரியாது.
இதுபோல் விட்டுக்குள் புகுந்து மனைவி, குழந்தைகள் கண் முன்னால் ஒருவர் அழைத்துசெல்லப்படுவார். ஆனால் அவர் நிலை குறித்து எந்த தகவலும் இருக்காது. இதை போல் போரின் போது சரணடைந்த பலரை பற்றியும் இது வரை தகவல் இல்லை.
பல வழிகளில் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதன் மூலம் தமிழர்கள் மிரட்டப்பட்டனர். ஒரு இரண்டு வயது குழந்தை தனது தாயிடம் தந்தை எங்கே என்று கேட்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த தாயும் ஒரு நம்பிக்கையில் , அப்பா சீக்கிரம் வந்துவிடுவார் என்று பதிலளிப்பார்.
ஆனால் எத்தனை ஆண்டுகளுக்கு தான் வந்துவிடுவார், விந்துவிடுவார் என்றே கூறுவது. எனவே இந்த விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்பட சர்வதேச நாடுகள் ஒரு உண்மையான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
No comments
Post a Comment