Latest News

September 09, 2015

குற்றம் இழைத்தவரே விசாரிக்க முற்பட்டால், அந்த விசாரணை எப்படி அமையும்?
by Unknown - 0

குற்றம் இழைத்தவரே விசாரிக்க முற்பட்டால் அந்த விசாரணை எப்படி அமையும்.  சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு அதன் உண்மைத் தன்மை புலப்படுத்தபட வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் சார்பாக, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சூசை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளக பொறிமுறை, சர்வதேச விசாரணை பற்றி பரவலாக பேசப்படுகிறது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுடையதும் மன்னார் மறைமாவட்ட மக்களினுடைய நிலைப்பாடாக, குறிப்பாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலே எங்களுக்கு தேவை சர்வதேச விசாரணை
உள்ளக பொறிமுறை என்பது குற்றவாளியை நீதிபதியாக நியமிப்பதற்கு சமமானது என்று மன்னார் ஆயர் அடிக்கடி சொல்வார்.

குற்றம் இழைத்தவரே என்ன நடந்தது என விசாரிக்க முற்பட்டால் எப்படி அந்த விசாரணை அமையும்? அதனால் யுத்தத்தில் நடைபெற்ற அனைத்து விபரீதங்கள், அனர்த்தங்கள், மக்களை காணாமல் ஆக்கபட்டமை, சட்டத்திற்கு புறம்பான கொலைகள் என்பனவற்றை சர்வதேச மட்டத்திலே விசாரிக்க வேண்டும்.

சர்வதேச குழு ஒன்று அமைக்கப்பட்டு, சர்வதேச விசாரணை ஒன்று நடத்தபட்டு, இதன் உண்மை தன்மை புலப்படுத்தபடவேண்டும்.

நீதி, சமத்துவம், சமாதானம் என்பது அந்த உண்மையை புலப்படுத்துவதில்தான் தங்கியுள்ளது.

ஆனால் யுத்தத்தில் இழைக்கப்பட்ட அனைத்து அனர்த்தங்களையும் பாதிப்புக்களையும் சர்வதேச மட்டத்திலே குழு அமைத்து விசாரணை செய்தாலே தமிழ் மக்களினுடைய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாகும் என்றார்.
« PREV
NEXT »

No comments