Latest News

August 22, 2015

யுத்தத்தின் போது படுகாயமுற்று இடுப்பிற்கு கீழ் இயங்காத ஒருவருக்கு வாழ்வாதார நிதி வழங்கியது-உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்.
by Unknown - 0

இலங்கையில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான... பின்தங்கிய நிலையில் உள்ள அதாவது வாழ்வாதரங்களை இழந்த உறவுகள்... உடலுறுப்புக்கள் இழந்தவர்கள் மற்றும் உதவிகளற்ற குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான தொழில் உதவி, மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவிகளை வழங்கி சமீப காலமாக பேருதவி புரிந்து வருகின்ற உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது மிகவும் பின்தங்கிய குடும்பங்களின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் வாழ்வாதாரப் பயனாளியாக அம்பாறை மாவட்டம் சாகமன் வீதி, குடிநிலவன் திருக்கோவிலைச் சேர்ந்த திரு. கனகசபை யோகராசா என்பவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

யோகராசாவின் சகோதரன் ஒருவர் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி மாவீரராகி விட்டார். இவரது தந்தையும் இவரது பத்து வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து போக இவரது தாயாரின் அரவணைப்பிலேயே பல துயரங்களோடு வாழ்ந்த வந்த இவரது குடும்பத்தில் அடுத்ததாக இவருக்கு துணையாக இருந்த ஒரே சகோதரியும் மர்மமான முறையில் அண்மையில் இறந்து போய்விட்டார். இவ்வாறு இவரது குடும்பத்தில் அனைவரும் இறந்து போக எஞ்சி இவருக்கு துணையாக இருப்பது இவரது வயதான தாயார் மட்டுமே.

இவரது வயதான தாயாரானவர், ஏதோ இருந்துவிட்டு தனக்குக் கிடைக்கின்ற கூலி வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் தனது உடல் இயலாத மகனை பல கஸ்டங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் பராமரித்து வருகிறார். இந்த வயதான தாயாராலும் தொடர்ந்து உழைத்து பராமரிக்க முடியாத நிலை உள்ளதாலேயே உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திடம் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இவரது உதவி வேண்டுகையினை ஆதாரபூர்வமாக ஏற்றுக் கொண்ட உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது, அவருக்கான வாழ்வாதார நிதியாக அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆடு, கோழிகள் வாங்கிக் கொள்வதற்காக கடந்த 20.08.2015 அன்று ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்களை வழங்கி உதவியுள்ளது.

ஆணையத்தின் வாழ்வாதார நிதியின் மூலமாக வீட்டில் இருந்தபடியே ஆடு, கோழி வளர்த்து அதன் மூலமாக வருகின்ற வருமானத்தில் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு... தனது மகனின் மருத்தவதேவை மற்றும் எதிர்காலத் தேவைகளையும் ஓரளவேனும் பூர்த்தி செய்ய முடியும் என்று தாயார், முழு நம்பிக்கையினைத் தெரிவித்ததோடு உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கும் உதவிகள் நல்கிய உறவுகளுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட திரு. யோகராசா அவர்களுக்கு உதவியை வழங்கிய ஆணையத்தின் இலங்கைக்கான செயற்பாட்டாளர் அவர்களுக்கும் உதவிகள் நல்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையமானது தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையங்கள் ஊடாக தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.



« PREV
NEXT »

No comments