Latest News

August 15, 2015

ஐ.தே.க ஆட்சியமைக்க த.தே.கூ ஆதரவு வழங்கும்- சம்பந்தன்
by Unknown - 0

ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ.தே.க. 105 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றிப்பெறுமென கருத்துக்கணிப்புக்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றன. நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.    

இதேவேளை ஐ.ம.சு.மு 70க்கும் 85 க்கும் இடைப்பட்ட ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஐ.ம.சு. கூட்டணியிலுள்ள மைத்திரியணியினர் பெரும்பான்மையினோர். ஐ.தே.க உடன் இணைந்து 18ஆம் திகதி ஆட்சி அமைப்பாளர்கள் அந்த ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்க காத்திருக்கிறது.   

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும். அந்த அரசில் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும். வரையப்படவுள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 65 வருடக்கால தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இதன் மூலம் உடனடி தீர்வு காணப்படுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.     

தமிழ் மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் விலை போனவர்கள் அல்லர். இனியும் நாம் விலைப்போகப் போவதில்லை. எமது நீண்ட கால போராட்டத்துக்கு உடனடியாக தீர்வு காணக்கூடிய ஒருவாய்ப்பான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதே எமது அதீதமான நோக்கமாகும்.   தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் இதை உள்ளூர் தலைவர்களுக்கு கூறி வந்துள்ளோம். சர்வதேச சமூகம் இதையேற்றுக்கொண்டுள்ளது. 

இனியும் காலத்தைக் கடத்தலாம். தமிழ் மக்களை ஏமாற்றலாமென யாரும் தவறான கணக்கை போட முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பு எம்முடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என அவர் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.   

புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கி தான் தொடர்ந்து ஆள வேண்டுமென்று நினைத்த மஹிந்த ராஜபக் ஷவை நாம் தோற்கடித்து நல்லாட்சியொன்றை நிறுவியிருக்கிறோம். இந்த ஆட்சிக்கு ஏற்ற புதிய மாற்றமொன்று நடைபெறும் தேர்தலிலும் இடம்பெற வேண்டும்.   தென்பகுதி மக்களிடம் மாற்றமொன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ்இ முஸ்லிம் மக்கள் இந்த மாற்றத்தை நல்ல முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். மாற்றமொன்று மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நாம் உறுதி செய்ய வேண்டும் அதற்கு ஏற்றவகையில் எங்கள் வெற்றி அமைய வேண்டும்.   

தமிழ் மக்கள் ஒருமித்த நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழவிரும்புகின்றார்கள். நாம் நாட்டை பிரிக்க விரும்பவில்லை பிளவுபடுத்தவும் முயற்சி செய்யவில்லை. எமது மக்கள் சகல உரிமைகளுடனும் சமத்துவமாக ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம் என்பதை தென்பகுதி மக்களும் சிங்களத்தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.   சர்வதேச விசாரணை அடுத்த மாதத்தில் விசாரணையாக அறிக்கையாக வெளிவரவிருக்கிறது. உண்மைகள் அறியப்பட வேண்டும். அது வெளிப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையே நாம் உறுதி செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறோம்.   

தேசிய இனம் ஒன்று அழிக்கப்படுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சர்வதேச சமூகமும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஐ.நா. சபையும் இதை அங்கீகரிக்கப் போவதில்லை.   தமிழ் மக்களுடைய ஆதரவு இன்றி முஸ்லிம் மக்கள் எந்தவுரிமையையும் பெற்று விடமுடியாது. அதேபோன்றே முஸ்லிம் மக்களுடைய உதவியின்றி தமிழ் மக்களும் எதையும் சாதித்து விட முடியாது. எனவே வரவிருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்த தமிழ் முஸ்லிம் சமூகம் தவறிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »

No comments