Latest News

August 21, 2015

உணர்ச்சி பொங்கும் அரசியல் தோல்வியை தரும் - பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
by admin - 0

நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த எதிர்ப்புக்கள், சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது.இந்த தேர்தலில் உணர்ச்சிப் பேச்சுக்களும், வெற்றுக் கோஷங்களும் எமது அரசியலைப் பலவீனப்படுத்துமேயன்றி ஒரு போதும் விடியலைத் தராது.என்று யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.  

 ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வேண்டி எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தியிருக்கின்றனர்.   

இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பெருமளவில் திரண்டு வந்து எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்திருப்பது மீண்டுமொரு முறை எமது மக்களது அரசியல் ஞானத்தினை முழு உலகிற்கும் வெளிக்காட்டியிருக்கின்றது.   முதற்கண் எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன்.   

மேலும், என் மீது நம்பிக்கை வைத்து 58,043 விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கி யாழ். தேர்தல் தொகுதியில் என்னை பெரு வெற்றி பெறச் செய்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன். 

இந்த வெற்றி வெறும் ஆரம்பமே.   எதுவித மறு பலனும் எதிர்பாராது தமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு எனது வெற்றிக்குத் துணை நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள் உரித்தாகுக.   உங்கள் உதவியும், ஒத்துழைப்பும் எதிர்வரும் காலங்களிலும் நிச்சயமாக எனக்கு அவசியம்.    

 எனக்குக் கிட்டிய வெற்றியை எனது அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். இந்தத் தேர்தலில் களமாடி வீழ்ந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனக் கூறியே இந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன்.   

பெருவாரியான பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிப் பரப்புரைகளைத் தாண்டி மக்கள் என்னைத் தெரிவு செய்தது எனது மென்வலு அரசியலின் மீதான அவர்களது நாட்டத்தையும், நம்பிக்கையையுமே பிரதிபலிக்கின்றது. 

  இந்த வெற்றி மென்வலுவிற்கான வெற்றி. இந்த வெற்றி எம் எதிர்காலத்திற்கான வெற்றி. இந்த வெற்றி எமது இளைஞருக்கு உரித்தான வெற்றி.   இனியும் தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்கவியலாது. இனியும் எம் இளைஞர் தொகை தொகையாய் மாளக் கூடாது. 

இதுவரை கண்ட இன்னல்களின் பிரதிபலனை நோக்கி மதியுடன் முன்செல்ல வேண்டிய காலமிது.   உணர்ச்சிப் பேச்சுக்களும், வெற்றுக் கோஷங்களும் எமது அரசியலைப் பலவீனப்படுத்துமேயன்றி ஒரு போதும் விடியலைத் தராது.   தந்த ஆணைக்குப் பணிகிறேன். அதற்கே சேவை செய்வேன். எமது தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை எட்டவென முழு மூச்சுடன் பணியாற்றும் அதேவேளை மக்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும்இ எமது இளைஞரைப் பலப்படுத்துவதிலும் எனது காத்திரமான பங்களிப்பை வழங்குவேன்.   

வாக்களித்ததுடன் மக்களாகிய உங்களது பங்களிப்பு நின்று போவதில்லை. என்னை நெறிப்படுத்துவதிலும், எமது அரசியலை வலுப்படுத்துவதிலும் உங்கள் வகிபாகம் என்றும் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் 
« PREV
NEXT »

No comments