Latest News

August 28, 2015

இலங்கையின் உள்ளக விசாரணையில் 'கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை'
by Unknown - 0

இலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார்.

கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அதற்கிடையில் அமெரிக்கா இப்படியான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கவலையளிப்பதாக ரட்ணவேல் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச பிரதிநிதிகளின் கண்காணிப்பில் உள்நாட்டில் நடந்துள்ள விசாரணை ஆணைக்குழுக்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்கவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ள சூழ்நிலையில், பெருமளவிலான அரசியல் கைதிகள் இன்னும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ரட்ணவேல் தெரிவித்தார்.

இலங்கைப் போரின் இறுதி மாதங்களில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர் குழுவின் முன்னைய அறிக்கை ஒன்று கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments