Latest News

August 24, 2015

பொலிஸாரினால் சித்திரவதைக்குள்ளான சந்தேக நபர்களின் உறவினர்களுக்கும் புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தல்
by admin - 0

மன்னார் முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இரு சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தநிலையில் குறித்த இரு சந்தேக நபர்களின் கிராமத்திற்குச் சென்ற புலனாய்வுத்துறையினர் அவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இசைமாளத்தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை மாலை முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, முருங்கன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் கீழ் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரு சந்தேக நபர்களும் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக பொலிஸாரினால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களும் மறுநாள் ( சனிக்கிழமை) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

குறித்த இரு சந்தேக நபர்கள் சார்பாகவும் சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் எம்.சதக்கத்துள்ளா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இதன்போது திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு பாட்டதாகக்கூறி முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் முருங்கன் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்,

குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவரின் கண், முகம் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு வாய் உதட்டுப்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதையும் சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும்,

குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன் போது குறித்த வழக்கு விசாரணை இன்று மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.

இந்த நிலையில், இரு சந்தேகநபர்களின் கிராமமான மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இசைமாளத்தாழ்வு கிராமத்திற்கு நேற்று மாலை சென்ற முருங்கன் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் புலனாய்வுத்துறையினர் அங்குள்ள மக்களை அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களினாலும் எமக்கோ அல்லது எமது பொலிஸாருக்கே எதுவித பிரச்சினைகளும் ஏற்பட்டால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டதன் பின் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.என அச்சுறுத்தியுள்ளனர்.

இதன் போது இன்று இடம் பெற்ற குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஊடாக உறவினர்கள் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் விடுத்த அச்சுறுத்தல் தொடர்பாக மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கிராமத்திற்குச் சென்று அச்சுறுத்தல்களை விடுத்த பொலிஸ் புலனாய்வுத்துறையினர் இருவரும் யார்?

இவர்கள் ஏன் சட்சியாளர்களின் உறவினர்களை அச்சுரூத்தியுள்ளனர் என்ற விடயங்களை சமர்ப்பிக்குமாறும் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் குறித்த இரு சந்தேக நபர்களையும்,

தாக்கியதாக கூறப்படும் முருங்கன் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பேருக்கும் எதிராக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர், முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு குறித்த இருவரின் வைத்திய அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு மன்று உத்தரவிட்டுள்ளதோடு, குறித்த இரு சந்தேக நபர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்னார் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி அன்று இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments