ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை யாருக்கு வழங்குதல் மற்றும் அமைச்சுக்களுக்கான இலாகா ஒதுக்கீடுகளை ஒழுங்கமைத்தல் என்பன தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் அமைச்சுப் பதவிகளை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் இரண்டு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டுவருகின்றது.
இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும் தற்போது செப்டெம்பர் நான்காம் திகதி அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சரவை அமைச்சுக்களும் 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுக்களும் உருவாக்கப்படவுள்ளன. 45 அமைச்சரவை அமைச்சுக்களில் 30 அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் 15 அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு உயர்கல்வி நீர்ப்பாசனம் விவசாயம் நெடுஞ்சாலைகள் சமுர்த்தி உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை வழஙகுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் எவ்வாறு அமைச்சுப் பதவிகளை பகிர்வது என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன. சம்பிக்க ரணவக்கவுக்கு மெகா பொலிஸ் என்ற அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெகா பொலிஸ் என்பது பாரிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் மெகா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை குறிப்பதாகும்.
மேலும் ரவி கருணாநாயக்கவுக்கு நிதியமைச்சு வழங்கப்படவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹஷீமுக்கு வங்கி மற்றும் நிதி என்ற அமைச்சு வழங்கப்படவுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவுக்கு வெளிநாட்டு முதலீட்டு அமைச்சு வழங்கப்படவுள்ளது. முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சராக இருந்த ருவன் விஜயவர்த்தனவுக்கு மக்கள் சமாதானம் பாதுகாப்பு என்ற அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்லவும் தொலைத்தொடர்பு அமைச்சராக ஹரின் பெர்ணான்டோவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக சஜித் பிரேமதாஸவும் கல்வி அமைச்சராக அகில விராஜ் காரியவசமும் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சராக அர்ஜுன ரணதுங்கவும் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்னவும் புத்த சாசன அமைச்சராக எம்.கே.டி.ஏ.எஸ். குணவர்தனவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சராக நவின் திஸாநாயக்கவும் உள்ளூராட்சி அமைச்சராக வஜித அபேவர்தனவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக கயந்த கருணாதிலக்கவும் எரிசக்தி அமைச்சராக ஜோன் அமரதுங்கவும் ஊடகத்துறை அமைச்சராக சாகல ரத்ணாயக்கவும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக பழனி திகாம்பரமும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுதேச மருத்துவத்துறை அமைச்சராக எஸ்.பீ.நாவின்னவும் போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும் விவசாய அமைச்சராக துமிந்த திஸாநாயக்கவும் உயர் கல்வி அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகமவும் நியமிக்கப்படலாம் என்றும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன எனினும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பாக உண்மையான விபரங்களை பெறமுடியவில்லை.
இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் எவ்வாறு அமைச்சுப் பதவிகளை பகிர்வது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாலேயே அமைச்சரவை பதவியேற்பை ஒரு வாரத்துக்கு பிற்போடவேண்டியேற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்களின் எணணிக்கை 30 ஐ விட அதிகரிக்கப்படுமாயின் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவேண்டியுள்ளது.
எனவே செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள முதலாவது பாராளுமன்ற அமர்வில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனையை நிறைவேற்றிவிட்டு இரண்டாம் திகதி அமைச்சரவையை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையே பெற்றது. இந்நிலையில் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியுமாக இருந்தும் தேசிய அரசாஙகம் அமைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
No comments
Post a Comment