சென்னை: உடல்நிலை கோளாறு காரணமாக மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இயலாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார் என செய்திகள் வெளியானது. இதனை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலாமின் வீடு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் தன்னால் பங்கேற்க இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உந்துசக்தியாக விளங்கியவர் அப்துல் கலாம். இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என வாழ்ந்தவர். கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தவே எனக்கு விருப்பம். உடல்நிலை காரணமாக தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை. அப்துல் கலாம் மீது தமக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அப்துல் கலாம் இறுதிச் சடங்கில் எனது சார்பில், அரசு சார்பில் அமைச்சர்கள் பங்கேற்பர். அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தரராஜ், உதயகுமார் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்துவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்
No comments
Post a Comment