இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள ''எதிர்க்கட்சித் தலைவர் யார்'' என்ற பிரச்சினையானது இலங்கை ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இருப்பதை காண்பிக்கிறது என்று மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரன் விமர்சித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ''ஆட்சியமைப்பதற்கான அருகதை யாருக்கு உள்ளது'' என்பதை உறுதிப்படுத்துமாறு கோராது, ஜனாதிபதி, குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை அரசமைக்க அழைத்ததே காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களில், அமைச்சரவையில் இணைந்துள்ளவர்கள் போக ஏனையோரை எதிர்க்கட்சியாக செயற்பட அனுமதித்தால், அது நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அச்சமும் அவர்களை அவ்வாறு செயற்பட அனுமதிக்காமல், ஜனாதிபதி தவிர்ப்பதற்கு ஒரு காரணம் என்றும் வித்தியாதரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு என்றும் அவர் கூறுகிறார்.
நன்றி BBC Tamil
Social Buttons