இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ள நிலையில் அவரது வருகையினை வடமாகாணசபை புறக்கணித்துள்ளது.எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ரணில் அறிவித்துள்ளார்.
விஜயத்தின் போது முதலில் நாகவிகாரைக்கு இன்று காலை பயணித்திருந்த பிரதமர், பின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விலும் பங்கெடுத்திருந்தார். அத்துடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன்; அவர், பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மீள்குடியேறிய மக்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
இதேவேளை முன்னாள் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரை தனது கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பதவியினை ஏற்க ரணில் அழைப்பு விடுத்ததாக தெரியவருகின்றது.எனினும் அதனை அவர் நிராகரித்துவிட்டதாகவும் ஆனாலும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை மாவட்டச் செயலகத்தில் வைத்து சந்திக்க அவரே ஏறபாடுகளை செய்து வழங்கியதாகவும் தெரியவருகின்றது.பிரதமர், அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாளை சனிக்கிழமை, பலாலியில் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் உயரதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்துக்குச் சென்று அங்கு பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment