Latest News

October 21, 2014

கத்தி பட விவகாரம்: சத்யம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு
by admin - 0



‘கத்தி’ பட விவகாரம் தொடர்பாக சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவரவுள்ள ‘கத்தி’ படத்தை தடை செய்யக்கோரி பல தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. மேலும், நேற்று படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி நாளை கத்தி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டிய நிலையில் சிறிது நேரத்திலேயே நேற்று இரவு 11.45 மணியளவில் சென்னை ராயப்பேட்டை திரு.வி.க.சாலையில் உள்ள சத்யம் திரையரங்கின் மீது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் தொடுத்தது. உருட்டுக்கட்டைகளால் தாக்கியதில் திரையரங்கின் முகப்பில் இருந்த அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின.

மேலும், திரையரங்க வளாகம் முழுவதும் அந்த மர்ம கும்பல் அடித்து நொறுக்கினர். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை திரையரங்கின் மீது வீசி, அந்த மர்மகும்பல் தப்பிச்சென்றனர். இதில் திரையரங்கு முன்பகுதி பயங்கர சேதமடைந்தது.

இதுகுறித்து அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘கத்தி’ படம் வெளிவரக்கூடாது என்று வலியுறுத்தி சிலர் இதில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments