Latest News

July 17, 2014

295 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
by admin - 0

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது.


தனது விமானத்துடனான (எண் எம்எச்17) தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடைசியாக அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு என்பது அந்த விமானம் யுக்ரெய்ன் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதுதான் இருந்தது என்று மலேஷியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறது.

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கிழக்கு யுக்ரெய்னில் இந்த விமானம் தரையில் எரிந்ததை கண்டதாக மாஸ்கோவில் இருக்கும் வான்வழி கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. அந்த குறிப்பிட்ட விமானம் ரஷ்ய வான்பறப்பிற்குள் நுழையவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த விமானம் சுமார் 33,000 அடி உயரத்தில் ஏவுகணை மூலம் தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரெய்னின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆண்டன் ஹெரஷெங்கோ தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.

யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் காரணமா?

கிழக்கு யுக்ரெய்னில் யுக்ரெய்ன் ராணுவ விமானங்கள் ஏவுகணைதாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் யுக்ரெய்னிய அரசை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தமக்கு தெரியவந்திருப்பதாக கூறும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

யுக்ரெய்னிய ராணுவத்துக்கு சொந்தமான எஸ்.யு 25 ரக விமானம் ஒன்று புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் யுக்ரெய்னிய பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் (ஆவணப்படம்)
யுக்ரெய்ன் கிளர்ச்சியாளர்கள் (ஆவணப்படம்)

ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின.

இந்த காட்சிகளை பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதிகளுக்குத் தான் உதவி செய்வதாகக் கூறப்படுவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது.

10,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை எதனால் சுட்டு வீழ்த்த முடியும்?

இதேவேளை 10,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தவேண்டுமானால் அது தொலைதூரம் பறக்கவல்ல நிலத்தில் இருந்து வான்வெளிக்கு ஏவக்கூடிய நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையால் மட்டுமே சாத்தியம் என்றும், அதுவும் கூட அத்தகைய ஏவுகணை ராடார் உதவியுடன் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெவித்தார்.

அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த விமானமானது மனிதர்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மேன்பேட் என்கிற ஏவுகணைத்தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்காது என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அத்தகைய குறுகிய தூர ஏவுகணையின் வீச்சு விமானம் பறந்துகொண்டிருந்த உயரத்த்க்கு செல்லாது என்று மதிப்பிடப்படுகிறது.

இவை தவிர வானிலிருந்தபடியே ஏவப்பட்டு தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏற்றிச் சென்ற ராணுவ தாக்குதல் விமானத்தினால் மட்டுமே இந்த விமானம் தாக்கப்பட்டிருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதில் எந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது அல்லது எப்படி இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது என்பதை அமெரிக்காவின் வசம் இருக்கும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது.

நிலத்தில் இருந்து வான் நோக்கிச் சென்று தொலைதூர தாக்குதல் நடத்தப்படும்போது அத்தகைய ஏவுகணைகள் வெளி உமிழும் புற ஊதாநிற புகையை இந்த செயற்கைக்கோள்களின் படங்கள் காட்டிக்கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

« PREV
NEXT »

No comments