Latest News

June 17, 2013

பிரபாகரனின் கனவை நனவாக்க அரசு முயற்சி
by admin - 0

புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் மூலம் இலங்கையை இரண்டாக்க கண்ட கனவையே அரசு போர் புரியாமலேயே நனவாக்க முனைகிறது.'' இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா. பொது எதிரணிக் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு. வடக்குத் தேர்தல் நடத்துவது குறித்து நாட்டில் தற்போது பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாட்டின் பல தலைவர்களும் பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், அரசிலுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வடக்குத் தேர்தலுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தமது முடிவைத் தெளிவாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் இனவாதம் தோன்றி பேராபத்து ஏற்படும். அத்துடன், பிரபாகரன் போர் மூலம் நாட்டை பிளவு படுத்தலாம் என்று கண்ட கனவை இன்று போரின்றி தாமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம், வடக்குத் தேர்தல் ஆகியவை குறித்து ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்துக்கும் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தவறக்கூடாது என்றார்.
« PREV
NEXT »

No comments