Latest News

September 08, 2011

மறைந்த பின்னும் மறையாத உயிர் : இன்று சர்வதேச கண் தான தினம்
by admin - 0


ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுபவை கண்கள். சில காரணங்களால்(பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சகணக்கானோர் பார்வையின்றி, உலகை காண முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் மீண்டும் கண்பார்வை பெற முடியும். அதற்கு ஒரே வழி கண்தானம். இது முற்றிலும் ஒரு சிறந்த கொடை.

நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஏன் கண்தானம் : நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.

ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக வழங்கமுடியாது.

கண்தானம் செய்ய விரும்புவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்தவுடன் அவருடைய கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை ஆப் செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டி பயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் கண்களை தானமளிக்க வேண்டும்.
« PREV
NEXT »

No comments